கண்டலேறுவில் இருந்து ஜீரோ பாயின்ட்டிற்கு 596 கன அடி நீர் வருகை: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை, செப்.22: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீ கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டிற்கு வந்தடைந்தது. இந்த தண்ணீர் கடந்த ஜூன் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு 1.6 டிஎம்சி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டிஎம்சி தண்ணீர், ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்கியது.

இதில், கடந்த வாரம் வரை 2.750 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் வினாடிக்கு 1,400 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வினாடிக்கு 1,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டில் வினாடிக்கு 596 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

 

Related Stories: