திருச்சி, டிச.21: திருச்சி உறையூரில் நுண் உரம் செயலாக்க மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சியில் கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட 60வது வார்டில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகேயுள்ள பாத்திமா நகர் பகுதி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 15 சென்ட் நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் அந்த இடத்தில் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க இருந்த நிலையில், இதையறிந்த அப்பகுதியினர், அந்த இடம் பூங்காவிற்கான இடம், அங்கே நுண் உரம் தயாரிக்கும் மையம் கட்டக் கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்று மனு கொடுத்தனர்.