புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரி மீனவர் வலையில் சிறிய ரக ஆளில்லா விமானம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி சோலைநகரை சேர்ந்தவர் சுதாகரன் என்கிற நாகேந்திரன். இவர் நேற்று முன்தினம் மாலை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினருடன் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, வலையில் ஒரு மர்ம பொருள் சிக்கியது. அதனை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்துபார்த்தபோது, ஆளில்லா சிறிய விமானம் என தெரியவந்தது. இதுகுறித்து மரைன் போலீஸ் எஸ்பி பாலச்சந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து மீனவர்களிடம் சிக்கிய சிறிய ரக விமானத்தை கைப்பற்றினர்.இந்த ஆள் இல்லா விமானம் குறித்து மரைன் போலீசார் கூறுகையில், மீனவர் வலையில் சிக்கிய ஆளில்லா விமானம் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது. இதனை ரேடார் உதவியுடன் தரையிலிருந்தும், கப்பலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், ஏவலாம்.இலக்கை குறி வைத்து விமானப்படை பயிற்சிக்காக பயன்படுத்துவது வழக்கம்.