திருவண்ணாமலை, டிச.18: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையில், புனிதநீர் தெளித்து பரிகார பூஜை நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, கடந்த மாதம் 29ம்தேதி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 9ம்தேதி இரவுடன் நிறைவடைந்தது. தீபமலையில் மகாதீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும், மலை மீது செல்ல பக்தர்களுக்கு இந்த ஆண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் என பலரும் மலை மீது சென்றனர். மலையில் தீபம் காட்சியளித்த நாட்களில் பக்தர்கள் சிலரும் மலை மீது சென்று வழிபட்டனர். இறைவனின் திருமேனியாக வணங்கப்படும் மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறைவுருவான மலை மீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது.