நாட்டு வெடிகுண்டுகள் திருவில்லி.யில் செயலிழப்பு

திருவில்லிபுத்தூர், டிச. 17: திருவில்லிபுத்தூர் அருகே குன்னூர் பீட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான் வேட்டையாடிய கும்பலிடம் மான்கறியையும், நாட்டு வெடிகுண்டுகளையும் வனத்துறையினர் கைப்பற்றினர். இந்த நாட்டு வெடிகுண்டுகள் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் தண்ணீருக்குள் வைத்து பாதுகாப்பாக வைத்து இருந்தனர். அவற்றை செயலிழக்கச் செய்ய மதுரையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 நாட்டு வெடிகுண்டுகளை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள இடத்தில் பள்ளம் தோண்டி அதில் வைத்து செயலிழக்கச் செய்தனர். அப்போது மிகப்பெரிய அளவிலான ஓசை கேட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: