வக்கீலை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

திருச்சி, டிச.17: திருச்சி மாவட்டம் அல்லித்துறையை சேர்ந்தவர் வக்கீல் சந்தர்(35). இவர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தில் மாநில அமைப்பாளராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் தென்னூர் இளங்கோவடிகள் தெருவில் பைக்கில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் இவரை நோக்கி ஓடி வந்தனர். இதனை கண்ட சந்தர் தப்பியோடினார். ஆனாலும், அவரை விரட்டி சென்ற மர்ம கும்பல் வெட்டியதில் சந்தருக்கு தலை, விலா பகுதி மற்றும் கையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இரவோடு இரவாக தப்பிய 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கைதான 5 பேரும் திருச்சி உறையூர் முத்துராஜா தெருவை சேர்ந்த திலிபன், ஆறுமுகம், வினோத்(எ)வாசுதேவன்(20), தனபால், புண்ணியமூர்த்தி ஆவார்கள். இதில் வாசுதேவன், வக்கீல் சந்தரின் உறவினர் மகளுக்கு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாசுதேவனை, சந்தர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன், கூட்டாளிகள் துணையோடு சந்தரை கொல்ல வந்தது தெரியவந்தது என்றனர். இதையடுத்து காரை பறிமுதல் செய்த ேபாலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிந்து அரசு மருத்துவமனைக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இரவோடு இரவாக 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.

Related Stories: