திருப்பூர்,டிச.15: திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வெள்ளியங்காடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுததலங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவைகள் உள்ளது. இந்நிலையில் வெள்ளியங்காட்டில் உள்ள பல வீதிகளில் தார் சாலை வசதிகள் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி பணியாளர்கள் வருவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது.