உடுமலை, டிச. 11: உடுமலை ரயில் நிலையம் வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலங்களில் நோய்ப்பரவலுக்கு முக்கிய காரணியாக அமைவது சுகாதாரமற்ற குடிநீராகும். எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்குவது மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் உடுமலை ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.கடந்த 2018-19 ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இந்த சுத்திகரிப்பு இயந்திரம் தற்போது பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.