கேழ்வரகு உற்பத்தி திறன் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்: விவசாயிகளுக்கு ரூ.15,062 கோடி பயிர் கடன்

சென்னை: கேழ்வரகு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.15,062 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17.8.2025 அன்று தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்துறை சார்பில் நடந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, இணையவழியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பயிர் கடன்களை பெறுவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு இனி விவசாயிகள் நேரில் செல்ல தேவையில்லை. இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின் கடன் தொகைக்காக இனி ஒரு வாரகாலம் விவசாயிகள் காத்திருக்கவும் தேவையில்லை. இந்த திட்டத்தில் விவசாயி ஒருவர் விண்ணப்பிக்கும் முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தங்களது கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்புக்கணக்கு எண் இரண்டில் ஒன்றை மட்டும் கொடுத்தால் போதும். இந்த விண்ணப்பம் வருவாய்த்துறை, வேளாண்மை துறை ஆகிய இரு துறைகளிலும் சரிபார்க்கப்பட்டு அன்றைய தினமே கடன் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் கடன் வழங்கும் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று, அதனை ஓர் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்ற நடைமுறையும் இருக்கிறது.

ஆனால், உடனடியாக கடன் வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதுவும், ஒரே நாளில் கடன் வழங்கும் திட்டமாகும். கடந்த ஆண்டில் ரூ.15,062 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17.37 லட்சம் விவசாயிகள் பெற்று பயன் அடைந்தார்கள். 4.43 லட்சம் பேருக்கு ரூ.2,645 கோடி கால்நடை வளர்ப்பு பிரிவின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், ரூ.3 ஆயிரம் கோடி கால்நடை பிரிவின் கீழ் கடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு விவசாய சாகுபடி பாசனப்பரப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 457.08 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் எக்டருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்களின் உற்பத்தித்திறன் 2023-24ம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது.

கேழ்வரகு உற்பத்தித்திறனில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித்திறனில் இரண்டாம் இடம். குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தித் திறனில் மூன்றாம் இடம் என்ற அளவில் அகில இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

பல மாநிலங்களில் விவசாயிகள் போராடி வரும் சூழ்நிலையில் போராட வேண்டிய அவசியமே இல்லாதவாறு விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை வழங்கி, அவர்களை மகிழ வைத்து விவசாய உற்பத்தியை பெருக்குவதில் திராவிட மாடல் அரசுக்கு இணை இந்தியாவில் எங்கும் இல்லை.

* கேழ்வரகு உற்பத்தித்திறனில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித்திறனில் இரண்டாம் இடம். குறுதானியங்கள், நிலக்கடலை உற்பத்தித் திறனில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

Related Stories: