ஊட்டி, டிச. 9: மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி அறிவிப்பு ஒன்றை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி வரும் காலங்களில் ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்பதே. இதற்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிதியோக் அமைப்பு, நான்கு குழுக்களை அமைத்துள்ளது. மருத்துவக் கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறை, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய அனைத்து மருத்துவ துறைகளையும் ஒரே கலவையாக 2030ல் கொண்டு வர அமைத்துள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக பள்ளிக் கல்வியிலும், மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. இதற்கும் மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.