திருவாரூர்: ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3ம் தேதி தமிழகம் வருகிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தின்போது அப்போதைய முதல்வர் மறைந்த கலைஞரின் பெரும் முயற்சியால் ரூ1.000 கோடி மதிப்பில் இந்த மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதில், தற்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். கடந்தாண்டு நவம்பர் 30ம் தேதி நடந்த 9வது பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்று தங்க பதக்கம் பெற்ற 34 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுவதாக இருந்தது. இதனால், பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 3 ஹெலிபேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது, பெஞ்சல் புயல் காரணமாக ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
