கோவை, ஆக 13: சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டின் 79-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நாடே தயாராகி வருகிறது. கோவையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின்போது வஉசி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நாளில் வஉசி மைதானமே வண்ண மயமாக காட்சியளிக்கும்.
இந்நிலையில், சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் போலீசார் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில், போலீசாருடன் இணைந்து, தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தினரும் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
