சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை டெல்லி போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் போலீசில் புகார் அளித்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு, ெசன்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், சாட்சி விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார். மீரா மிதுன் ஆஜராகவில்லை.
இதையடுத்து, கடந்த 2022 ஆகஸ்ட் 6ம் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், கடந்த விசாரணையின் போது, மீரா மிதுனின் தாயார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டெல்லி தெருக்களில் தன் மகள் சுற்றி வருகிறாள். அவளை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, இந்த நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக, டெல்லியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தலைமறைவான மீரா மிதுன் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், டெல்லி போலீசார் உதவியுடன் அவரை கண்டறிந்து பிடித்து உள்ளனர். தற்போது அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் விசாரணை அதிகாரி, மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
