சென்னை: ‘‘ஆன்லைனில் வழக்கு போடுவது, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் ஜானகிராமன் கூறியதாவது: ஆன்லைனில் வழக்குபோடுவதை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆன்லைன் மணல் விற்பனை பதிவினை முறைப்படுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த விலைக்கே மணல் விற்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாரவிரத போராட்டம் நடத்தப்படும். அதேபோல, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், ஏற்கனவே காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல, லாரி உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தினமும் பெறும் மாமூலை தவிர்த்து தற்போது மாதந்தோறும் மொத்தமாக பெற்றுக்கொள்கின்றனர். இதை தடுக்க அரசு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
The post 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று உண்ணாவிரதம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு appeared first on Dinakaran.