செய்யூர்: செய்யூர் வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், 12 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், கொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாடு பலியானது. புரெவி புயலின் காரணமாக நேற்று முன்தினம் முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, இரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாரத்தில் உள்ள செய்யூர், சூனாம்பேடு, பவுஞ்சூர், சித்தாமூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையினால், செய்யூர் அருகே ஆற்காடு, போரூர், சின்ன கயப்பாக்கம், வன்னியநல்லூர், கடுக்கலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அங்கு வசித்த மக்கள் உயிர் தப்பினர். இதேபோல், மேற்கு செய்யூரில் லோகபெருமாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, கொட்டகை சுவர் இடிந்து விழுந்து பலியானது.