ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் பொதுப்பிரிவு இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 79,938 இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும் நடைபெற்றது.

மொத்தமுள்ள 9,639 இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்களில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 7.5% உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் 92 மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று தொடங்கிய முதல்சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் 26,654 வரையிலான இடங்களை பிடித்த மாணவர்களும், 7.5% உள் ஒதுக்கீட்டில் முதல் 1343 இடங்களை பிடித்த மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் தங்களுடைய விருப்ப கல்லூரிகளை வருகிற 31ம் தேதி வரையில் தேர்வு செய்யலாம். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்ய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதன்பிறகு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி காலை இன்ஜினியரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

The post ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் பொதுப்பிரிவு இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: