ஆவடி, மார்ச் 20: ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மாஜி போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர். ஆவடி பகுதியான புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர், திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு, வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்து தங்க சங்கிலி பறிப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆவடி, திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் புகார் செய்தனர். இதனையடுத்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மேலும், போலீசார் செயின் பறிப்பு நடந்த இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது மேற்கண்ட நான்கு இடங்களிலும் ஒரே வாலிபர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரது உருவத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறி செய்த வாலிபர் ஆவடி, நந்தவன மேட்டூர், வ.உ.சி தெருவை சேர்ந்த சதீஷ் (32) என்பவர் என தெரிந்தது. எனவே நேற்று சதீஷை போலீசார் பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவர் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார்.