ஓசூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வரும் கர்நாடக மாநில பஸ்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். ஓசூர் நகரம் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லை பகுதியில் உள்ளது. இந்த நகரத்திற்கு கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 45 பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து ஓசூர் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக 20 பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. கர்நாடக மாநிலத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தியேட்டர்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவை எதுவும் நடக்கவில்லை.