நாகை,பிப்.21: அம்மா இரு சக்கர வாகனத்திற்கு 1,594 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்தார்.வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் நலனில் அக்கறை கொண்டு பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம் தமிழக அரசால் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என அறிவித்ததுள்ளது.சமுதாய அமைப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றில் தினக்கூலி, தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் பொருள் ஈட்டும் முக்கிய வருவாய் ஆதாரமாக திகழக்கூடிய ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயதுக்குட்பட்ட மகளிர் இத்திட்டத்தின் விதிகளுக்குட்பட்டு பயன் பெறலாம்.