களக்காடு, டிச. 4: களக்காட்டில் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை சகதிமயமாக மாறியுள்ளதால் மாணவ- மாணவிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.களக்காட்டில் இருந்து தலையணை செல்லும் சாலையில் ஐந்துகிராமம் அருகே களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படுகிறது. களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் களக்காடு சுபத்ரா பூங்காவில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை, மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ரோடு முழுவதும் பல்லாங்குழிகள் போல் குண்டு -குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது. தற்போது களக்காடு பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சாலை சகதிமயமாக மாறி நீச்சல் குளம்போல் மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இந்த பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சும் ரோடு பழுதடைந்து கிடப்பதை காரணம் காட்டி நிறுத்தப்பட்டு விட்டது.