மேலஅரியப்பபுரம் ரேஷன் கடையில் விற்பனை நாள் குறைப்பு கண்டித்து மேலஅரியப்பபுரத்தில் மக்கள் போராட்டம்

பாவூர்சத்திரம், டிச. 4: பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பபுரம் பெரியம்மன் கோயில் வளாகத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த கடை மூலம் நாடாக்கண்ணுப்பட்டி, வெள்ளைபனையேறிபட்டி, ரகுமானியாபுரம், கணக்கநாடார்பட்டி, சீதாராமன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த  1300 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். வாரத்தின் 4 நாட்கள் இந்த கடை திறந்திருக்கும். மீதி 2 நாட்கள் திரவியநகரில் உள்ள பகுதி நேர கடை திறந்திருக்கும். இந்நிலையில் மேலஅரியப்பபுரம் ரேஷன் கடையை பிரித்து ரகுமானியபுரத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

இந்த கடையில் வாரத்தின் ஒருநாள் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், 3 நாட்கள் மட்டுமே மேலஅரியப்புரம் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேலஅரியப்புரம் பகுதியினர் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் 4 நாட்கள் ரேஷன் கடை திறப்பதற்கு ஆவண செய்யப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: