சேந்தமங்கலம், நவ.13: சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் பூசாரிகள் இடையே உள்ள கோஷ்டி மோதல் காரணமாக சாமி சிலைகள் உடைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டி பெரியசாமி கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கருவறையில் இருந்த விளக்கு கூண்டு, வளாகத்தில் இருந்த கருப்பணார், முனியப்பன் சிலைகள் மற்றும் குதிரை வாகனத்தின் கால் பகுதி ஆகியவற்றை அடித்து உடைத்தனர். மேலும், பூசாரி ரகுவின் வீட்டு கதவை அடித்து உடைத்தனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தப்பியோடிய இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்த சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்ஐ கெங்காதரன் விசாரணை நடத்தினர்.