மலையூர் சுற்று வட்டார பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம்

கறம்பக்குடி, நவ.13: கறம்பக்குடி அடுத்த மழையூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மஞ்சள் காமாலை நோய் பரவிவருதால் சிறப்பு முகாம் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதியான மலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மலையூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பரிசோதனையில் 70க்கும் மேற்பட்டோர் குடிநீர் மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அவதிபடுவது தெரியவந்தது.

இதனால் நோய் பாதித்தவர்கள் மருந்து கடைகள் மற்றும் தனியார் நாட்டு மருந்து கடைகளில் மருந்து பெற்று வைத்தியம் பார்த்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார துறையினர் தலையிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையூர் பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: