போச்சம்பள்ளி, செப்.19: போச்சம்பள்ளி அருகேயுள்ள பட்டகரஅள்ளி ஏரியை கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.போச்சம்பள்ளி அடுத்த பட்டகரஅள்ளியில் ஏரி வறண்ட நிலையில் உள்ளது. இந்த ஏரிக்கு அருகே உள்ள பச்சனம்பட்டி ஏரியில் இருந்து சுமார் 3 கி.மீ தூரமுள்ள பட்டகரஅள்ளி ஏரிக்கு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, காங்கிரஸ் எம்பி செல்லகுமார் பட்டகரஅள்ளி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பச்சனம்பட்டி ஏரியில் இருந்து பட்டகரஅள்ளி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் முன்வைத்தனர். இதுகுறித்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதாக எம்பி செல்லகுமார் உறுதியளித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், வட்டார தலைவர்கள் ஜெயவேல், ராமன், விவேகானந்தன், மாவட்ட செயலாளர் கோவிந்தன், துரைசாமி, ராமச்சந்திரன், நடராஜ், கிருஷ்ணன், பழனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.