புதுக்கோட்டை,செப்.17: புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சிகளின் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், ஆலங்குடி, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட 8 பேரூராட்சிகள் உள்ளது. இந்த பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் பேருந்து நிலையங்கள் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் நிலையில் நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், சென்னை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்ளுக்கு நேரடியாக தினசரி வெளியூர் பேருந்துகள் வந்து சென்ற வண்ணம் இருக்கிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் கிராமங்களில் இருந்து விவசாயிகள், நகர் பகுதிக்கு கூலி வேலைக்கு செல்வோர்கள் என 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதிகள் இல்லாமல் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இருப்பதும் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை. இதனால் பேரூராட்சி பேருந்து நிலையங்களில் உள்ள குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.