திருமயம், செப்.17: திருமயம் அருகே தேசிய சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலை தடுப்புகளை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாம்பாறு பாலம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமண வரவேற்பு விருந்து ஒன்று நடைபெற்றது. இதில் அரசியல் முக்கிய தலைவர்கள் வருகையால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. இதனால் திருமயம் காவல் துறை சார்பில் திருமண மண்டபம் எதிரே உள்ள தேசிய சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல சாலை தடுப்புகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சி முடிந்த பல நாட்கள் ஆன நிலையில் சாலை தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலை தடுப்புகளை சாலையோரம் நகர்த்தி வைத்துள்ளனர். இதில் ஒரு தடுப்பு மட்டும் வாகனம் செல்லும் சாலையில் குறுக்கே உள்ளதால் விபத்து நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.