திருச்செங்கோடு, செப்.15: திருச்செங்கோட்டில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரே, ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். இதில், சமூக நீதிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்யவும், தொடக்கக் கல்வியை அழித்தொழிக்கும் அரசாணை 145 உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், பணிமாறுதல் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜாக்டோ-ஜியோவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு போலீசார் பேரணி நடத்த அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதனால், ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினர்.