திண்டுக்கல், ஆக. 22: கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்துள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையினால் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் உணவு தானியங்களும், 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்து உள்ளிட்ட இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே கோடை உழவு செய்துள்ள விவசாயிகள் அடி உரமாக காம்ப்ளக்ஸ் உரமிடுவது வழக்கம். இதற்காக அனைத்து கிராமங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், உரக்கடைகளில் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கும்படி வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை உத்தரவிட்டுள்ளார்.