கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வருகை

திண்டுக்கல், ஆக. 22: கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்துள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையினால் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் உணவு தானியங்களும், 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்து உள்ளிட்ட இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது.  இதற்கிடையே கோடை உழவு செய்துள்ள விவசாயிகள் அடி உரமாக காம்ப்ளக்ஸ் உரமிடுவது வழக்கம். இதற்காக அனைத்து கிராமங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், உரக்கடைகளில் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கும்படி வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தேவையை சமாளிக்கும் வகையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காம்ப்ளக்ஸ் உரம் மொத்தம் 4 ஆயிரத்து 800 டன் இருப்புள்ளது. இதுதவிர யூரியா 6 ஆயிரத்து 100 டன்னும், டிஏபி உரம் 1,800 டன்னும், பொட்டாஷ்சியம் உரம் 3 ஆயிரத்து 350 டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 750 டன்னும் இருப்புள்ளது.. உரம் வாங்கும் விவசாயிகள் ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அதன்மூலம் எவ்வளவு மானியம் கிடைக்கிறது என்பதை அறியலாம் என இணை இயக்குனர் தெரிவித்தார்.

Related Stories: