ஆவடி, ஆக.22: ஆவடி மாநகராட்சியில் ரூ.70 லட்சம் செலவில் 5 குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 17 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மிட்டினமல்லி சித்து குளத்தை ரூ.10 லட்சம் செலவிலும், மிட்டினமல்லி காலனி குளத்தை ₹15 லட்சம் செலவிலும், சேக்காடு சேரத்தம்மன் கோயில் குளத்தை ₹15 லட்சம் செலவிலும், தண்டுரை பெருமாள் கோயில் குளத்தை ₹10 லட்சம் செலவிலும், தண்டுரை நாகவல்லி அம்மன் கோயில் குளத்தை ₹20 லட்சம் செலவிலும் துர்வாரி ஆழப்படுத்திட ₹70 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகளை ஆவடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான க.பாண்டியராஜன் நேற்று முன்தினம் ஆவடி, சேக்காடு சேரத்தம்மன் கோயில் குளத்தில் இருந்து தொடங்கிவைத்தார். இதனை அடுத்து, 5 குளங்களும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின்போது மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சங்கர், ஜெயசீலன் உள்பட அதிகாரிகள், பொதுநலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.