கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் கடையை இடமாற்றக்கோரி மறியல்

கும்மிடிப்பூண்டி, ஆக. 20: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு, மேட்டு தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்த கடை சுமார் பத்து வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.  தற்பொழுது கட்டிடத்தின் உரிமையாளர், ரேஷன் கடைக்கு சென்றுவந்த வழியை மாற்றியுள்ளார். இதனால் சாலையோரமாக நின்று பொருட்களை வாங்கவேண்டியது உள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேட்டுத் தெருவில் இருந்து பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் இந்த ரேஷன் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். நீண்ட நாளாக வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனால் அரசுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேஷன் கடை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள். அந்த மனுவை பரிசீலனை செய்த பிறகு அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என அறிவுரை வழங்கினர். அதை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: