வேதாரண்யம், ஆக.14:தமிழகத்தில் வேதாரண்யம் நகராட்சி இரண்டாவது சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.வேதாரண்யம் நகராட்சியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். 1944ம் ஆண்டு பேரூராட்சியானது 1982ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியானது. 2004ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்ந்தது. 21 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சி கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 30 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நகராட்சியில் பொது சுகாதாரம் அடிப்படை வசதிகள் குடிநீர் தெருவிளக்கு 60 கி.மீ. தார்சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. சென்ற ஆண்டு கஜா புயலில் பாதித்தபோது 15 நாட்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து பொதுமக்களை இயல்பு நிலைக்கு திரும்ப செய்தனர்.