ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்

சங்கரன்கோவில், ஆக. 11:  சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் 9ம் திருநாளான இன்று தேரோட்டம் நடக்கிறது.சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக தபசுகாட்சி 13ம்தேதி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு அம்பாள், பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது.

8ம் நாளான நேற்று காலை கோமதிஅம்பாள்  வீணாகானம் செய்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 9ம் திருநாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. காலை 5 மணிக்கு கோமதிஅம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி கமிஷனர் முகைதீன் அப்துல்காதர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாலசந்தர் மேற்பார்வையில்  நகராட்சி பணியாளர்கள் ரதவீதிகளை சுத்தம் செய்து தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயணைப்பு வாகனத்தை கோயில் அருகில் நிறுத்தி வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 13ம்தேதி ஆடித்தபசின் சிகர நிகழ்ச்சியான தபசுகாட்சி நடக்க இருப்பதால் சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.ஆடித்தபசு விழாவில் இன்று

காலை 5 மணிக்கு கோயில் நடைதிறப்பு, 5.15 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளல், 6.30 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு மேல் தேரோட்டம்

மதியம் 1 மணிக்கு கோயில் நடைஅடைப்புமாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பு, 6 மணிக்கு வழக்காடு மன்றம்இரவு 8 நாட்டிய நிகழ்ச்சி, 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா.

Related Stories: