நாமக்கல், ஜூலை 24: நாமக்கல்லில், திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வாகன பிரசாரம் மேற்கொண்டனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், இருசக்கர வாகன பிரசாரம் நேற்று நடைபெற்றது. இதற்கு எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய பிரசார பயணத்தை மாவட்ட செயலாளர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரசாரத்தின் போது வெள்ளப்பெருக்கு காலத்தில் மேட்டுர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை செத்தமலை வழியாக கால்வாய் வெட்டி, திருமணிமுத்தாற்றில் விடவேண்டும். மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாத்திட, காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எலச்சிபாளையம் ஒன்றியம் வறட்சியின் பிடியில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் திருமணிமுத்தாறு திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த ₹1134 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உடனடியாக திட்டப்பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கோமதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து, எலச்சிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், சுந்தரம், வெங்கடாசலம், செல்வம் மற்றும் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் குப்புசாமி நன்றி கூறினார்.