அரியலூர், ஜூலை 23: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிரில் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. 2018-19ம் ஆண்டில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்பட்டது. நடப்பு காரீப் பருவத்தில் இறவையில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவும், படைப்புழுவால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கேற்ப நிவாரணம் வழங்க ஏதுவாக இருக்கும்.இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர அவசரத்தை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது மக்காச்சோளப் பயிரை முன்கூட்டியே காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.446 மட்டும் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகலை இணைத்து கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்று கொள்ளலாம். பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்யும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் இயற்கை பாதிப்பு ஏற்படும் முன்னரே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்ட பிறகு அப்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாது. எனவே தொடர் பாதிப்புள்ளாகும் பகுதியில் உள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.