மணமேல்குடி, ஜூன் 19: கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்களை காய வைக்க உலர்தளம் இல்லாததால் மணலில் காய வைக்கின்றனர். எனவே இப்பகுதிகளில் உடனடியாக மீன்பிடி உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மீன்கள் மற்றும் இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.