நாமக்கல், மே 24: தொகுதியின் வளர்ச்சிக்காக சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி பணியாற்றுவேன் என நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கொமதேக வேட்பாளர் சின்ராஜ் உறுதியளித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் ஆகியோருடன் சென்று, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆசியாமரியத்திடம், வெற்றி சான்றிதழ் பெற்ற சின்ராஜ் கூறியதாவது: தேர்தல் நேரத்தின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும், மக்கள் பிரச்னைகள் குறித்து குழு அமைத்து, ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவேன். குறிப்பாக குடிநீர் பிரச்னை, சாலை வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.