கிருஷ்ணகிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். வளாகத்தில் 658 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னனு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் இன்று (23ம் தேதி) எண்ணப்படுகின்றன. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லகுமார், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்பட 15 பேர் போட்டியிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 26 ஆயிரத்து 348 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,72,614, பெண் வாக்காளர்கள் 7,53,498, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 236 பேர் உள்ளனர். தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 87 ஆயிரத்து 364 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 35 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 311 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.76 சதவீதம் ஆகும்.

இதேபோல், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சத்யா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி உள்பட மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 294 பேர்.  இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 186 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 9 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 99 பேரும் உள்ளனர். இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 943 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 353 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 306 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 69.45 சதவீதம் ஆகும். பதிவான ஓட்டுகள் அனைத்தும் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 658 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு  எண்ணும் பணியாளர்கள் உள்பட மொத்தம் 448 பேர் பணியில் இருக்கின்றனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் வாக்குகள் மொத்தம் 26 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் கீழ் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மையங்கள் வீதம், மொத்தம் 6 மையங்களில் தலா 14 மேசைகள் போடப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

இதைத் தவிர ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், ஒவ்வொரு சுற்று எண்ணப்பட்ட பிறகும், முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 நுழைவு வாயிலிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பிறகே போலீசார் அனைவரையும் உள்ளே அனுப்புகின்றனர். ஓட்டுகள் எண்ணப்படும் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், முன்னேற்பாடு பணிகளை பொது பார்வையாளர்கள் ராம்ராவ் போன்ஸ்லே, கல்யாண் சந்த்ஷமன், ஆப்ரகாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபாகர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

Related Stories: