திருவள்ளூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலப்போட்டிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.இந்த போட்டியில் 14 ஒன்றியங்களை சேர்ந்த 14 அணிகளில் மொத்தம் 226 மகளிர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தெருக்கூத்து கலைஞர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வை.ஜெயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.