திருச்சி, மார்ச் 15: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போது வாக்குசாவடி அமைக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி உள்ளது. இதில் 65வார்டுகள் அடங்கும். 2 ஆண் வாக்குச்சாவடிகள், 2 பெண் வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்கு 791 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 795 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் மூன்று நகராட்சிகளில் மொத்தம் 72 வார்டுகள் உள்ளது. அதில் ஆண்களுக்கு 26ம், பெண்களுக்கு 26ம் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 46 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 98 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.