வேதாரண்யம், மார்ச் 15: வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, 100 சதவீதம் வாக்குப்பதிவினை எட்டும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், தனியார் கிராமியக் கலைக்குழுவினர் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.