ஒரத்தநாடு, மார்ச் 14: தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக தலையாமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு தலையாமங்கலத்துக்கு பைக்கில் சென்றார். திருமங்கலக்கோட்டை மாதவன்குடிக்காடு கோவில் அருகே சென்றபோது, பைக்கில் பின்னால் வந்த 2 மர்ம ஆசாமிகள், திடீரென ரமேஷை இரும்பு ராடால் தாக்கினர். பின்னர், அவரை கீழே தள்ளிவிட்டு பணம் இருக்கிறதா என்று பார்த்தனர். அப்போது ரமேஷிடம் பணம் ஏதும் இல்லாததால் பைக்கில் இருவரும் தப்பி சென்றனர். மயக்க நிலையில் காயத்துடன் கிடந்த ரமேஷை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.