ஊத்துக்கோட்டை, பிப். 14: ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணாத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். மேலும், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் கடந்த வாரம் ஒரு ஆழ்துளை கிணறு பழுதாகியது. மற்ற 2 ஆழ்துளை கிணறுகளிலும் ஏற்கனவே தண்ணீர் வற்றியிருந்தது. இதனால், அப்பகுதியில் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து புகார் தெரிவிக்க பேரிட்டிவாக்கம் ஊராட்சி செயலாளரை கிராம மக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தற்காலிகமாக தனி நபர்களுக்கு சொந்தமான வயல்வெளிகளில் இருக்கும் பம்ப்செட்டுகளில் இருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தினர். இதற்கும், நேற்று அந்த பம்ப்செட் உரிமையாளர்கள் தடை விதித்துவிட்டனர்.