சீர்காழி, பிப்.13: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் ரயில்வே கேட் அருகே கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பைப் லைனில் கடந்த பல ஆண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. பைப்லைனில் தண்ணீர் செல்லும்போது உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் பைப்லைனில் தண்ணீர் செல்வது நிற்கும்போது உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கழிவுநீருடன் தண்ணீர் உள்ளே சென்று விடுகிறது. இந்த தண்ணீரை பலரும் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உடைப்பு ஏற்பட்ட பைப்பை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினந்தோறும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. பல கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிர்த்து வரும் நிலையில், பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வருத்தமான ஒன்றாகும். எனவே பொதுமக்கள் நலன் கருதியும், தண்ணீர் வீணாகுவதை தடுக்கும் வகையிலும் உடனே உடைப்பு ஏற்பட்ட பைப்லைனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.