நாமக்கல், பிப்.13: நாமக்கல் அருகே, விவசாயியை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து டிவி, காஸ் சிலிண்டரை திருடிச்சென்றனர். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே செலம்ப கவுண்டம்பாளையம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் பூசன் (65) விவசாயி. மனைவியை விட்டு பிரிந்து தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தோட்டத்தில் கட்டில் போட்டு படுத்திருந்தார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், பூசனை பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தனர். பின்னர், வீட்டில் இருந்த டிவி, செல்போன், சமையல் காஸ் சிலிண்டர், மொபட் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். பூசன் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் நேற்று மதியம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.