தென்காசி, பிப்.13: தென்காசியை அடுத்த மத்தளம்பாறை அருகே காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தியது. தென்காசியை அடுத்த மத்தளம்பாறை கென்டி ஊத்து பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. இதில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவை சேதமடைந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று அதிகாலை வேளையில் மீண்டும் அதே பகுதியில் யானை கூட்டம் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதில் அருணாசலம் என்பவருக்கு சொந்தான 10 தென்னை மரங்கள், சேதுராமன் என்பவருக்கு சொதமான 3 ஏக்கர் நெற்பயிர், பொன்னையா என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் வாழை மற்றும் 5 தென்னை மரங்கள், இசக்கி என்பவருக்கு சொந்தமான 20 தென்னை மரங்கள், வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வாழை பயிர் ஆகியவை அடங்கும். சேதமடைந்த பகுதிகளை குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வன காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர் மாடசாமி, ராஜ், சதாசிவம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை யானைகள் வந்துள்ளதால் தொடர்ந்து அந்த பகுதியிலேயே முகாமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.