சிவகிரி, டிச. 6: வாசுதேவநல்லூரில் மாயமான குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் மீண்டும் வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் ஊராட்சியில் இருந்து வாசுதேவநல்லூருக்குள் வரும் மங்கம்மாள் சாலையில் சேனை விநாயகர் கோயில் தெரு, பனையடியான் கோயில் தெரு ஆகியன உள்ளன. பனையடியான் கோயில் தெருவில் சேனைத்தலைவர் சமுதாய நடுநிலைப்பள்ளி உள்ளது. இத்தெருக்கள் வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் 7வது வார்டில் வருகிறது. இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியின் அருகே இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மோட்டார்கள் பொருத்தப்பட்ட வசதியுடன் இரண்டு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் நிறுவப்பட்டன. இந்த இரண்டு தொட்டிகளும் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன.