காதல் திருமணம் செய்த அலுமினிய பட்டறை தொழிலாளி திடீர் சாவு

பேட்டை, நவ. 8: சுத்தமல்லியில் காதல் திருமணம் செய்த அலுமினிய பட்டறை தொழிலாளி திடீரென இறந்தார். சுத்தமல்லி பெரியார் நகரில் வசித்து வந்தவர் அருணாசலம்(40). இவரது மனைவி யோகலட்சுமி(30). இவர்களுக்கு அருண்(11), தினேஷ்(8) என இரு மகன்கள் உள்ளனர். யோகலட்சுமி இவருக்கு 2வது மனைவி. இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.பாவூர்சத்திரத்தில் உள்ள அலுமினிய பட்டறையில், அருணாசலம் வேலைபார்த்து வந்தார். வாரம் இருமுறை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து செல்வார். அருணாசலம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

நேற்று காலை வீட்டில் இருந்த அருணாசலத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுத்தமல்லி எஸ்ஐ பாலன் விசாரித்து வருகிறார். நெல்லையில் வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில் அருணாசலமும் அதன் பாதிப்பால் இறந்துவிட்டதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறந்த அருணாசலம் பேட்டை செக்கடியை சேர்ந்தவர். இவரது முதல் மனைவி ராதா. இவருக்கு தனபால்(18) என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் ராதா பிரிந்து சென்றுவிட்டதால் யோகலட்சுமியை காதலித்து 2ம் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: