குமாரபாளையம், நவ.2: குமாரபாளையம் நடராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவர் பிரபு, பஞ்சாபில் நடைபெறும் தேசிய பளுதூக்கும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் குமாரபாளையம் நடராஜா கலை அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர் பிரபு, 120 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றார். இதன் மூலம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறும் தேசிய இளையோர் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றார். அதேபோல், கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர் முரளி ஆனந்தன், சிறந்த உடல் கட்டமைப்பு போட்டியில் 70 கிலோ பிரிவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர்களை நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் கல்லூரியின் நிர்வாகிகள் பாராட்டி பரிசு வழங்கினர்.