வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் விதைகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தால் நடவடிக்கை அரியலூர் மாவட்ட விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்டத்தில்  வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் விதைகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்து வரும் விதை விற்பனையாளர்கள், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட பல்வேறு பயிர்களின் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதைகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பல வெளிமாநிலங்களில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்கு வரும் விதைகளையும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

      அவ்வாறு வெளிமாநில விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதில் வெளிமாநிலங்களில் இருந்து  கொள்முதல் செய்யும் விதைகளின் ஒவ்வொரு குவியலுக்கும் விதை சட்டத்தில் உள்ளபடி கொள்முதல் பட்டியலுடன் படிவம்-2 கட்டாயம் பெற வேண்டும். படிவம்-2 என்பது விதை உற்பத்தி செய்யும் மாநிலத்தின் விதைச்சான்று அலுவலரால் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் சான்றாகும். மேலும் விதை குவியல்களின் குவியல் எண்ணும் கொள்முதல் பட்டியலில் உள்ள குவியல் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் விதைகள், சான்று விதைகளாக இருந்தால் உற்பத்தியாளர் விபர அட்டையும், சான்று அட்டையும் ஒவ்வொரு மூட்டையிலோ அல்லது பையிலோ தையலிட்டு ஈயக்குண்டு கோர்க்கப்பட்டு குண்டில் முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.

சான்று அட்டையோ, உற்பத்தியாளர் அட்டையோ இல்லாமல் இருந்தாலோ அல்லது கிழிக்கப்பட்டிருந்தாலோ அந்த விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். மேலும் விபர அட்டையில்    பயிர்,    ரகம்,    நிலை,    குவியல் எண்,    அளவு, ஆய்வு செய்த தேதி, காலாவதி நாள், உற்பத்தியாளர் முகவரி ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும்.

  இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டாலோ, விதை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தாலோ விற்பனையாளர்கள் மீது  சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: