தண்டராம்பட்டு, அக்.4: தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மீது, பாலியல் புகார் அளித்த மாணவி, திருச்சிக்கு செல்ல மறுத்ததால் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த 21 வயது மாணவி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பாலியல் புகார் அளித்த மாணவிக்கு தொடர்ந்து அதே கல்லூரியில் படிக்க, கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.